முன்னுரை
ஜோதிடத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒரு முக்கியமான விதி என்னவென்றால் பாவகம்/ ஆதிபத்தியம் எப்போது செயல்படும் காரகத்துவம் எப்போது செயல்படும்?
பாவகம்/ஆதிபத்தியம் என்பது ஒரு கிரகம் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டின் சுப மற்றும் அசுப தன்மைகள் இது கிரகத்தின் தசா காலத்திலோ அல்லது புக்தி காலத்திலோ செயல்படுவது
கிரக காரகத்துவம் என்பது அந்தக் கிரகத்தின் தன்மைகள் அதாவது சுப மற்றும் அசுப தன்மைகள்/குணங்கள், இது அந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் பிரதிபலிக்க கூடியதாகும்.

3-ஆம் பாவகம்.
லக்னத்திலிருந்து கணக்கிடும்போது மூன்றாவதாக வருவது 3-ஆம் பாவகம், இந்த 3-ஆம் பாவகம் அல்லது ஆதிபத்தியம். பொதுவாக 3,6,10,11 ஆகிய இடங்கள் உபஜெய ஸ்தானம் என்று சொல்லப்படுகின்றன. 3-ஆம் இடத்தின் பொதுவான விசேஷங்கள் கீழ் வருபவை
-
- முயற்சி, தகுதி
- நீங்கள் எத்தகைய செயல்திறன் பெற்றவர்கள்
- அங்கீகாரம், வெற்றி
- இளைய சகோதரன்/சகோதரி
- நற்புகழ்
- இயல், இசை. நாடகம் மற்றும் எழுத்து
- தைரியம்
- வீரியம்
- படைவீரன்
- சக்தி
- நற்பண்புகள்
- பாரம்பரியம்
- பொழுதுபோக்கு
- டைமிங் சென்ஸ்
- தனிப்பட்ட மத கடமைகளை சரிவர செய்தல்
- குறுகிய பிரயாணங்கள்
- எட்டாம் இடம் மூலம் வரும் தீமை மூன்றாமிடம் வழியா சரியாகும் என்பது ஒரு விதி
மேலே கொடுக்கப்பட்டது 3-ஆம் ஆதிபத்திய விசேஷங்கள் இனி பொதுவாக 3-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்ப்போம், ஒவ்வொரு பாவகதத்திலும் கிரகங்களின் காரகத்துவங்கள் உள்ளே அடங்கி இருக்கின்றன ஆகையால் எந்த கிரகங்கள் 3-ஆம் பாவகத்தில் நின்றால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.
குரு: ஜோதிடத்தில் குரு முதன்மை சுபகிரகம் குரு. குரு இருக்கும் வீட்டையும் சுபத்துவ படுத்துவார் தன்னுடைய 5 7 9-ஆம் பார்வையால் பார்க்கும் வீட்டையும் மற்றும் கிரகங்களையும் சுபத்துவ படுத்துவார். 3 6 8 12 ஆகிய இடங்கள் மறைவு ஸ்தானங்கள் என்று குறிப்பிடப்படுகிறது இதில் மூன்றாம் இடத்தில் குரு பகவான் இருந்தால் அவர் மறைந்து இருப்பதாக அர்த்தம் தான் ஆனால் மூன்றாம் இடத்து குரு லக்னத்திற்கு 7ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தையும் மற்றும் 11-ஆம் இடத்தையும் பார்ப்பார் இந்தப் பார்வையின் மூலம் நல்ல கணவன்/மனைவி, தந்தையிடம் மிகுந்த பாசம் மற்றும் எதிலும் வெற்றி மற்றும் லாபம் இருக்கும். ஆனால் எதிலும் நீங்களே விட்டுக்கொடுத்து போகும் நிலை ஏற்படும். மூன்றாமிடத்தின் விசேஷ சுப காரகத்துவங்கள் ஆன முயற்சி, தைரியம், இளைய சகோதரர் மேல் அளவு கடந்த பாசம், கீர்த்தி, நற்புகழ் இவை அனைத்திலும் சுபமாக கிடைக்கும்
சந்திரன்: ஜோதிடத்தில் சந்திரனை மட்டும் இரண்டு பிரிவாக பார்க்க வேண்டும் ஒன்று வளர்பிறைச் சந்திரன் மற்றொன்று தேய்பிறைச் சந்திரன், வளர்பிறைச் சந்திரன் சுபகிரகம் என்றும் தேய்பிறைச் சந்திரனை அதாவது தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் அசுப கிரகம் என்றும் பார்க்க வேண்டும். ஆக வளர்பிறைச் சந்திரன் 3-ஆம் இடத்தில் நின்றால் ஒரு பலன் தசமி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் 3-ஆம் இடத்தில் நின்றால் மற்றொரு பலன்.
-
- வளர்பிறை சந்திரன்: பொதுவாக வளர்பிறைச் சந்திரன் எதையும் வளர்க்கும் தன்மை உடையவர் ஆகையால் தசமி தாண்டிய சந்திரன் சுபத்துவம் ஆக இருக்கும் பொழுது அவர் தைரியம் வீரியம் மற்றும் இளைய சகோதரர் மீது அளவுகடந்த பாசத்தையும் அதிகமாக தருவார், பவுர்ணமி சந்திரனாக இருக்கும்பொழுது மேலே சொன்ன அனைத்து ஆதிபத்திய விசேஷங்களிலும் முழுமை இருக்கும். பொதுவாக ஒளி கிரகங்கள் 3 6 8 12-ல் மறைவது நல்லதல்ல.
- தேய்பிறைச் சந்திரன்: தசமி திதி தாண்டிய தேய்பிறை சந்திரன் 3-ஆம் இடத்தில் இருப்பது அவ்வளவு விசேஷம் இல்லை என்றால் அம்மாவாசை சந்திரன் இன்னொரு சனிக்கு நிகரானவர் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது தசமி திதி தாண்டிய தேய்பிறைச் சந்திரன் ஏறக்குறைய சனியைப் போல 70% இருப்பார் ஆக 3-ஆம் இடத்தின் ஆதிபத்தியங்கள் அனைத்தும் குறைந்து காணப்படும் முயற்சியில் தடங்கள் கோழைத்தனம் இளைய சகோதரர்கள் மீது அன்பு பாசம் இல்லை போன்றவை இருக்கும் இந்த தேய்பிறை சந்திரனை சனியும் செவ்வாயும் பார்த்தால் நன்மை இன்மை அல்லது பாவத்துவம் அதிகமாக இருக்கும்.
சூரியன்: ஒளி கிரகமாக சூரியனை ஜோதிடத்தில் முதன்மை கிரகமாக குறிப்பிடப்படுகிறது அத்தகைய சூரியன் 3-ஆம் இடத்தில் இருக்கும் பொழுது தன்னம்பிக்கையின் மூலம் முயற்சி, தைரியத்துடன் கூடிய தன்னம்பிக்கை, தகுதி தேடிவரும், எடுத்த காரியத்தை முடிப்பீர்கள், எலக்ட்ரிக்கல் போன்றவற்றில் ஈடுபாடு. இத்தகைய ஆதிபத்திய விஷயங்கள் ஓங்கியிருக்கும். இந்த சூரியனை பாவ கிரகங்களான சனியும் செவ்வாயும் பார்க்கும் பொழுது அல்லது சேர்ந்து இருக்கும் பொழுது அங்கே பாவத்துவம் அதிகமாக இருக்கும் ஆகையால் பலன் எதிர்மறையாக இருக்கும்.
புதன்: தனித்திருக்கும் புதன் ஜோதிடத்தில் ஒரு சுப கிரகம், அத்தகைய புதன் 3-ஆம் இடத்தில் இருக்கும் பொழுது உங்களின் டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும், நகைச்சுவைத் திறன், எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு, ஒரு விஷயத்தில் உங்களின் முயற்சி புத்தியை பயன்படுத்தி இருக்கும், வெற்றி மற்றும் நற்புகழ், இதில் மூன்றாம் இடத்தில் புதன் ஆட்சியோ அல்லது உச்சமாக இருக்கும் பொழுது இவை அனைத்தும் பரிபூரணமாக இருக்கும். ஜேர்ணலிஸ்ட் மற்றும் கவிதை எழுதும் எழுத்தாளர்களை புதன் இவ்விடத்தில் இருந்தால் உருவாக்குவார். புதனுடன் பாவ கிரகங்களான சனியும் செவ்வாயும் பார்க்கும் பொழுது அல்லது சேர்ந்து இருக்கும் பொழுது அங்கே பாவத்துவம் அதிகமாக இருக்கும் ஆகையால் பலன் எதிர்மறையாக இருக்கும்.
சுக்கிரன்: ஜோதிடத்தில் குருவுக்கு அடுத்த சுப கிரகம் சுக்கிரன், அத்தகைய சுக்கிரன் 3-ஆம் இடத்தில் இருக்கும் பொழுது சுக்கிரன் கொடுக்கும் ஆண் மகனுக்கு தேவையான வீரியம் பரிபூரணமாக இருக்கும், இளைய சகோதரன்/ சகோதரி இடம் அளவு கடந்த பாசம் இருக்கும், இயல் இசை நாடகம் போன்ற சுக்கிரனின் காரகத்துவங்கள் மூலம் மேலோங்கி திகழ்வார், சுக்கிரனுக்கு 3, 8 இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆக குறிப்பிடப்படுகிறது ஆக சுக்கிரன் மூன்றாம் இடத்தில் மறைந்தால் தாமத திருமணம் இருக்கும் ஆனால் திருமணத்திற்குப் பின் தாம்பத்தியம் நன்றாக இருக்கும்.
செவ்வாய்: ஜோதிடத்தில் செவ்வாய் ஒரு முக்கால் பாவ கிரகம், இருக்கும் வீட்டை கெடுத்து தான் தன்னுடைய காரகத்துவங்களை மற்றும் பலன்களை செய்வார். பொதுவாக செவ்வாய் மூன்றாம் இடத்தில் இருப்பது நல்லது அல்ல ஏனென்றால் இதை காரகோ பாவ நாஸ்தி என்று ஜோதிடத்தில் அழைக்கப்படுவதுண்டு. 3-ஆம் இடத்தின் உயிர் காரகத்துவங்கள் இளைய சகோதரர்கள் அல்லது சகோதரிகள், மூன்றாமிடத்தில் செவ்வாய் பாவத்துடன் இருந்தால் செவ்வாய் தசை அல்லது செவ்வாய் பார்த்த சனி தசை செவ்வாய் புக்தியில் காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யும் அதாவது இது தம்பி/தங்கைக்கு கட்டம். இந்த காரகோ பாவ நாஸ்தி செவ்வாய் பாவத்துவம் அதிகமாக இருக்கும் பொழுது மட்டுமே, சுபத்துவம் கொண்டு இருக்கும்போது செவ்வாய் தனக்கே உரிய தைரியம் வீரியம் படைவீரன் சக்தி முயற்சி போன்ற அனைத்திலும் வெற்றியை தருவார்.
சனி: ஜோதிடத்தில் ஒரு கிரகம் முழுக்க பாவகிரகம் என்றால் அந்த கிரகம் சனிதான், சனி பகவான் எந்த வீட்டில் இருந்தாலும் இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவங்களை கெடுத்தான் பலனை தருவார் ஆகையால் சனி பகவான் 3-ஆம் வீட்டில் இருக்கும்பொழுது தம்பி தங்க இடம் போட்டி பொறாமை மன வருத்தம் போன்றவை இருக்கும், எதிலும் நிதானம், முயற்சியில் தடங்கள் தைரியம் இன்மை போன்ற பலன்கள் இருக்கும். சுபத்துவம் கொண்டு இருக்கும்போது சனி பொறுமையுடன் கூடிய முயற்சி இருக்கும், ஒரு விஷயத்தில் தடை இருந்தாலும் அதை இறுதியில் செய்து முடிப்பீர்கள். சனியன் மூன்றாம் பார்வை ஐந்தாம் இடத்தில் இருப்பதால் குழந்தைகளிடம் கருத்து வேறுபாடு இருக்கும், மற்றும் ஏழாம் பார்வை ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் சனியின் நிலை கொண்டு அங்கே தந்தையிடம்/ தந்தைக்கு பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் போன்றவை இருக்கும், மற்றும் பத்தாம் பார்வை பன்னிரண்டாம் இடத்தில் விழுவதால் வீண் விரயங்கள் இருக்கும்.
ராகு: ராகு கேதுவிற்கு 3 6 10 11 ஆகிய இடங்கள் மிகுந்த நன்மைகளை தரும். உபஜெய ஸ்தானத்தில் இருக்கும் ராகு கேதுக்கள் இருக்கும் வீட்டை பொருத்து நன்மைகளைச் செய்வார்கள். ராகுவிற்கு வீடு கொடுத்தவன் உச்சமோ அல்லது ஆட்சியோ ஆகியிருந்தால் மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றியைத் தருவார், ராகு தசையில் ராகு இருக்கும் வீட்டின் அதிபதி போலவும் தன்னை பார்க்கும் கிரகத்தின், சேர்ந்து இருக்கும் கிரகத்தின் காரகத்துவங்களை எடுத்து பலனை செய்வார். குறுக்கு வழி, அதித துணிச்சல், எதையும் சீக்கிரம் குறுக்கு வழியிலாவது சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் போன்றவை இருக்கும்.
கேது: பெரும்பாலும் ராகுவைப் போல்தான் கேதுவும் செயல்படுவார் ஆனால் கேது எதையும் வளர்க்கும் தன்மை கொண்டவர், கேதுவும் நிழல் கிரகம் தான் ஆனால் ராகுவைப் போல் ஆழ்ந்த இருள் கிரகம் இல்லை ஆகையால் கேது எத்தகைய சுபத்துவமாக 3-ஆம் வீட்டில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து தைரியம் அமையும், உங்களின் சிந்தனை உங்களைப் பற்றியே உங்களுக்குள் தேடுதலை பற்றியே இருக்கும், தெய்வ வழிபாட்டின் மூலம் புகழ் சேரும், தாம்பத்தியத்தில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். சுபத்துவம் மற்றும் பாவத்துவம் பொறுத்தே மற்றவைகளை கணக்கிட முடியும்.
இது 3-ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் நின்றால் என்ன என்பன பொது பலன்…

Leave a Reply